ஓ.பன்னீர்செல்வம் குறித்து யாரும் தரக்குறைவாக விமர்சிக்க வேண்டாம் என அதிமுக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ள எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். தரப்பினர் கூறும் கருத்துகளுக்கு எதிர்கருத்துகளை தெரிவிக்க வேண்டாம் எனவும் கூறி உள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில், சட்டமன்றத் தேர்தலை போல நாடாளுமன்றத் தேர்தலையும் உங்கள் தலைமையில் எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டாக வலியுறுத்தினர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். பற்றியும் யாரும் தரக்குறைவாக விமர்சிக்க வேண்டாம் என்றும் தமிழக மக்கள் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.
கட்சியின் சட்டப் போராட்டங்களை குறித்து கவலைக் கொள்ளாமல், கட்சிப் பணிகளில் கவனம் செலுத்துங்கள் என்றும் அறிவுறுத்திய ஈபிஎஸ், தொண்டர்களும், நிர்வாகிகளும் உறுதியாக இருந்தால் எதிராளிகளை வீழ்த்துவது உறுதி எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
எனவே, நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை உடனே தொடங்குமாறு அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார். ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அதிமுகவில் உட்கட்சி பிரச்னை இல்லை என்றும், அதிமுக தலைமையில் தான் நாடாளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி அமையும் என உறுதிபடத் தெரிவித்தார்.