சினிமா தயாரிப்பாளர் ஆர்.பி. செளத்ரி மறைவுக்கு நடிகர்கள் விக்ரம், சூர்யா, தனுஷ் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். நேற்று உதய்பூரில் விபத்தில் உயிரிழந்த நிலையில், சென்னையில் உள்ள அவரின் இல்லத்திற்கு உடல் கொண்டுவரப்பட்டு, அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் பலர் ஆர்.பி. செளத்ரி உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
திரைப்பட தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி. செளத்ரி ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சைப் பலனின்றி நேற்று (மே 5) மாலை காலமானார்.
அவரது உடல் இன்று சென்னை கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்திய பிறகு இறுதி சடங்குகள் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில், நடிகர்கள் சிவகுமார், சூர்யா, விக்ரம், தனுஷ் உள்ளிட்ட நடிகர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஆர்.பி. செளத்ரி இல்லத்திற்கு நேரில் வருகைப்புரிந்துள்ளனர்.
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 99 திரைப்படங்களை ஆர்.பி. செளத்ரி தயாரித்துள்ளார். 1988 ஆம் ஆண்டு அடிபாபம் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். 1990 ஆம் ஆண்டு புது வசந்தம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
தொடர்ந்து நாட்டாமை, பூவே உனக்காக, ஆனந்தம், சேரன் பாண்டியன், லவ் டுடே, நீ வருவாய் என, புன்னகை தேசம் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களைக் கொடுத்தார்.
« முந்தைய செய்தி (Previous)
சிறுமிக்கு பாலியல் தொல்லை! தவெக நிர்வாகி ‘பாம்பு’ தினேஷ்...உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்: