உதயநிதி ஸ்டாலினின் மனைவியும் இயக்குநருமான கிருத்திகா ஜீ5 ஓடிடி தளத்துக்காக பேப்பர் ராக்கெட் என்ற வெப் சீரிஸை இயக்கியிருந்தார். காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன், கௌரி கிஷன் போன்ற பலர் நடித்திருந்த இந்தத் சீரிஸானது விம்ரசன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. முதல் பாகத்துக்கு ரசிகர்களிடையே கிடைத்த வரவேற்பு காரணமாக தற்போது பேப்பர் ராக்கெட் பார்ட் 2 தற்போது தயாராகி வருவதாக உதயநிதி சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். தற்போது அதற்கான பணிகளில் கிருத்திகா ஈடுபட்டுவருவதாக கூறப்படுகிறது.
உதயநிதியும் கிருத்திகாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். பேப்பர் ராக்கெட் பட புரொமோஷன் நிகழ்ச்சிகளில் தங்கள் காதல் கதைகளை இருவரும் ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டனர். சமீபத்தில் உதயநிதி விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். அப்போது கண்கள் கலங்க உதயநிதியை கிருத்திகா கட்டியணைத்து பாராட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில் கிருத்திகா உதயநிதி காதல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பது வைரலாகிவருகிறது. அவரது பதிவில், காதலிக்கவும், அதனை வெளிப்படுத்தவும் பயம்கொள்ளாதீர்கள். இது இயற்கையின் முழு மகிமையையும் பரிந்துகொள்ள ஒரு வழி என்று குறிப்பிட்டிருந்தார்.
சிவா, பிரியா ஆனந்த் இணைந்து நடித்த 'வணக்கம் சென்னை' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அனிருத்தின் பாடல்கள், சந்தானத்தின் காமெடி ஆகியவை ஹைலைட்டாக அமைந்த இந்தப் படம் நல்ல வெற்றியைப் பதிவு செய்தது. பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் ஆண்டனி நடிப்பில் காளி படத்தை இயக்கியிருந்தார். வணக்கம் சென்னையைப் போல இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.