ராதாபுரம் யூனியன் தேர்தலில் போட்டியிட்ட பெண் கவுன்சிலர் வேட்பாளர் மக்களைச் சந்திக்க வரவே இல்லை. நோட்டீஸில் அவரது படம்கூட அச்சிடப்படவில்லை. ஆனாலும் வெற்றி பெற்ற அவர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
ராதாபுரம் யூனியனுக்கு உள்பட்ட 17-வது வார்டில் பெண் கவுன்சிலர் வேட்பாளராகக் களமிறங்கிய சௌமியா ஜெகதீஷ் அதற்கு விதிவிலக்காகச் செயல்பட்டார். தி.மு.க சார்பாக போட்டியிட்ட அவர் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு நேரில் வராமல் அவரது சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. அதன் பின்னர் தேர்தல் பிரசாரத்துக்கும் அவர் வெளியில் எங்குமே வரவில்லை.
வேட்பாளர் சௌமியா ஜெகதீஷ் சார்பாக அச்சிடப்பட்ட தேர்தல் விளம்பர பிட் நோட்டீஸ்களில் கூட அவரது புகைப்படம் அச்சிடப்படவில்லை. அதனால் அவர் யார் என்பதுகூட வாக்காளர்களில் பலருக்கும் தெரிந்திருக்கவில்லை. நாளிதழ் உள்ளிட்ட எந்த ஊடகத்திலும் வேட்பாளர் சௌமியா படம் வரவே இல்லை.
தேர்தல் களத்துக்கே வராத சௌமியா யூனியன் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து ராதாபுரம் யூனியன் சேர்மன் பொறுப்புக்கு அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கட்சியினர் தெரிவிக்கிறார்கள். 18 வார்டுகள் கொண்ட ராதாபுரம் யூனியன் கவுன்சிலர்களில் 12 தி.மு.க-வினர் வெற்றி பெற்று பெரும்பான்மை இருப்பதால் பெண் கவுன்சிலர் சௌமியா, யூனியன் தலைவராகத் தேர்வாகும் வாய்ப்பு இருப்பதாகக் கட்சியினர் தெரிவிக்கிறார்கள்.
கட்சி நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்காமல், வாக்கு சேகரிப்புக்குக் கூட வராத நிலையிலும் சௌமியா ஜெகதீஷை கவுன்சிலராகத் தேர்ந்தெடுத்த ராதாபுரம் யூனியன் 17-வது வார்டு வாக்காளர்களுக்கு பிரதிபலனாக அவர் என்ன செய்யப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:-
https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S