இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
இதனை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா காலத்துக்கு பின் பள்ளிக்கு சென்ற மாணவி ஒருவருக்கு நடந்த கொடூரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுஹூன் மாவட்டத்தில் அரசு பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக கேஷவ் யாதவ் என்பவர் உள்ளார். இவர் பள்ளியில் சிறப்பு வகுப்பு நடைபெறுகிறது என ஏழாம் வகுப்பு மாணவி ஒருவரை வகுப்பறைக்கு அழைத்துள்ளார்.
அங்கு அவரிடம் தனியாக சிக்கிய மாணவியை மிரட்டியுள்ளார் . மேலும் வகுப்பு அறையில் வைத்தே மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
தனக்கு நடந்த கொடூரம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி பள்ளியில் உள்ள இரண்டு பெண் ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அவர்கள் மாணவிக்கு உதவி செய்யாமல் தலைமை ஆசிரியரிடம் இது குறித்து தெரிவித்துள்ளனர்.
அப்போது தலைமை ஆசிரியர் மாணவியை அழைத்து மிரட்டியுள்ளார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த மாணவி ஒரு கட்டத்தில் தனது தாயிடம் தெரிவித்துள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தாய், இந்த சம்பவம் குறித்து உடனடியாக புகார் செய்தார். அதன்பேரில் பள்ளி சென்ற போலீசார் விசாரணையில் இறங்கினர். பின்னர் பள்ளி தலைமை ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியரை கல்வித்துறை இடைநீக்கம் செய்துள்ளது.
எனினும் பள்ளியில் வைத்து மாணவிக்கு நடந்த இந்த கொடூரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.