ருத்ரதாண்டவம் படத்தை பார்க்கும்போது திருமாவளவன் எப்படி இன்றைக்கு பட்டியல் இன மக்களை ஏமாற்றுகிறார் என்பது போன்ற காட்சி உள்ளதைப் பார்க்கிறோம் என்று பாஜக சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
சிதம்பரத்தில் வேலூர் இப்ராஹீம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ருத்ரதாண்டவம் திரைப்படத்தை நான் பார்த்தேன். இன்று திருமாவளவன் என்ன காரியத்தை செய்கிறார்? தலித் மக்களை ஏமாற்றுகிறார். தலித் மக்களின் மத்தியில் பல்வேறு தவறான கருத்துகளைப் பரப்பி, பிற சாதியினருக்கு மத்தியில் மோதல் போக்கை ஏற்படுத்துகிறார். அதுபோன்ற நிகழ்வுகள் அந்தத் திரைப்படத்தில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. ருத்ர தாண்டவம் படம் பட்டியலின மக்களின் நியாயமான உணர்வுகளையும் அவர்களின் பாதிப்புகளையும் காட்டுகிறது. அதேவேளையில் திருமாவளவன் போன்றவர்கள் பட்டியல் மக்களை வைத்து சாதிவெறியை உண்டாக்கி அந்த மக்களை கல்வி அறிவில் மேம் படுத்தாமல், மோசமான சூழல் அந்த சமூகத்திற்கு உருவாக்கிக் கொண்டிருக்கிறார். அந்த செயலை ருத்ரதாண்டவம் திரைப்படத்தில் காட்டியுள்ளனர். அதனால் அந்தப் படத்தை நாங்கள் வரவேற்கிறோம்.
இன்னும் சொல்லப்போனால் அந்தப் படத்தில் திருமாவளவன் போன்ற ஒருவர் வரக்கூடிய காட்சிகூட உள்ளது. அவர்கள் எந்த நோக்கத்தில் எடுத்தார்கள் என்று தெரியவில்லை. அந்தப் படத்தை பார்க்கும்போது திருமாவளவன் எப்படி இன்றைக்கு பட்டியல் இன மக்களை ஏமாற்றுகிறார் என்பது போன்ற காட்சி உள்ள சூழலை பார்க்கிறோம். வெளிப்படையாக பட்டியல் இன மக்களை தவறாகப் பயன்படுத்தக்கூடிய காட்சி ருத்ர தாண்டவம் படத்தில் வைத்துள்ளனர்.” என்று வேலூர் இப்ராஹீம் தெரிவித்துள்ளார்.