திமுக அரசு அளித்த வாக்குறுதிப்படி, பணி நிரந்தரம் வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு செய்த மேல்முறையீட்டை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொகுப்பூதிய செவிலியர்கள் நேற்று சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு கழகம் சார்பில் நடந்த இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட 750-க்கும் மேற்பட்ட செவிலியர்களை கைது செய்த போலீசார் வாகனத்தில் ஏற்றி கிளாம்பாக்கத்தில் இறக்கி விட்டனர். இதையடுத்து, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் செவிலியர்கள்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து அவர்களைக் கைது செய்து, ஊரப்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் போலீஸார் அடைத்தனர். அங்கும் செவிலியர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். செவிலியர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து, தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் நேற்று செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில், போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களுடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொங்கல் பண்டிகைக்கு முன்பாக 723 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இருப்பினும் அமைச்சருடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் 6-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த செவிலியர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை போலீசார் வாகனத்தில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:-
https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S