துரைச்சாமிபுரம் இடைகால் அருகே கோர விபத்து: பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் - 6 பேர் உடல் நசுங்கி பலி, 20 பேர் கவலைக்கிடம்
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள துரைச்சாமிபுரம் இடைகால் பகுதியில் இன்று அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து, அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இன்று அதிகாலை துரைச்சாமிபுரம் இடைகால் அருகே தென்காசி நோக்கிச் சென்ற தனியார் பேருந்தும், எதிரே வந்த பேருந்தும் துரைச்சாமிபுரம் இடைகால் அருகே உள்ள வளைவில் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.
மோதிய வேகத்தில் இரண்டு பேருந்துகளின் முன்பக்கமும் அப்பளம் போல் நொறுங்கியது. பேருந்துகளில் பயணித்த பயணிகள் இடிபாடுகளுக்குள் சிக்கி அலறினர். இந்த விபத்தில் 6 பயணிகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கடையநல்லூர் மற்றும் சுரண்டை காவல்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பேருந்துகளின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த படுகாயமடைந்த பயணிகளை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்தவர்களில் 20க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
விபத்து காரணமாக தென்காசி கடையநல்லூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறையினர் போக்குவரத்தை சரிசெய்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து கடையநல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.