தளபதி விஜய் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே தளபதி விஜய் விரைவில் அரசியலில் களமிறங்க போவதாக அவ்வப்போது சில தகவல்கள் வெளியாகி வந்தது. அது மட்டும் இல்லாமல் கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளை, நேரில் சந்தித்து அவர் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது. இது அவருடைய அரசியல் முன்னெடுப்பாகவே பெரிய அளவில் பார்க்கப்பட்டது.
இந்த சூழலில் இந்த 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் தன்னுடைய தமிழக வெற்றிக் கழக கட்சியினை அதிகாரபூர்வமாக அவர் வெளியிட்டார். தொடர்ச்சியாக கட்சியின் கொடியும், பாடலும் வெளியானது. கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் பல லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் தன்னுடைய முதல் அரசியல் மாநில மாநாட்டை வெகு சிறப்பாக நடத்தி அரசியல் களத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார் தளபதி விஜய். அது மட்டுமல்லாமல், திராவிட முன்னேற்றக் கழகத்தை நேரடியாகவே தாக்கி பேசி அவர் தமிழக அரசியலில் பெரும் சலசலப்பையும் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியாக பெண்கள் பாதுகாப்பு குறித்து தமிழக அரசு உடனடியாக சிறந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் ரீதியாக அணுகும் நபர்களின் மீது கொடுக்கப்படும் புகார்களை ஆய்வு செய்ய தனியான இணையதளம் ஒன்றை தமிழக அரசு தொடங்க வேண்டும் என்று அண்மையில் அவர் அறிக்கை கொண்டு வெளியிட்டு இருந்தார். இந்த சூழலில் தமிழக அளவில் தற்பொழுது பெரும் மழை பெய்து வருகிறது, மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், ஏன் அவர் இன்னும் எந்த விதமான அறிக்கையும் வெளியிடவில்லை என்ற கேள்வி முன் வைக்கப்பட்டுள்ளது.
மூத்த பத்திரிகையாளர் மணி, தனியார் நிறுவனம் ஒன்றுக்கு அளித்த போட்டியில் "கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல் விஜய் எங்கே போனார்? அவரை கடந்த சில நாட்களாகவே காணவில்லை. இன்னும் ஒரு அறிக்கையை கூட அவர் வெளியிடாதது ஏன்?. அவர் மீடியாவையும் இதுவரை சந்திக்கவில்லை .மக்கள் சிரமப்படும்போது அவர்களுடன் நிற்காதவர் ஒரு அரசியல் தலைவரா? இதுவே விஜயகாந்தாக இருந்திருந்தால் இந்நேரம் மக்களை சந்திக்க சென்றிருப்பார்" என்று பேசியிருக்கிறார் பத்திரிக்கையாளர் மணி.