இந்திய சினிமாவை பொறுத்தவரை வாரிசு நடிகர்கள் பல சமயங்களில் பெரிய அளவில் சாதிக்க முடியாமல் போவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த நடிகரின் விஷயத்தில் அது உண்மையில் பொய்த்துப் போனது என்று தான் கூற வேண்டும். அவர் தான் மலையாள திரை உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கி வரும் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான். பட்டப் படிப்பை முடித்த பிறகு, வெளிநாட்டில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவர், கடந்த 2012 ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியான "செகண்ட் ஷோ" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் தன்னுடைய கலை உலக பயணத்தை தொடங்கினார். அவர் திரைத்துறையில் அறிமுகமான இந்த 12 ஆண்டுகளில், இந்திய சினிமாவின் முக்கிய நடிகராக அவர் மாறியிருக்கிறார் என்றால் அது மிகையல்ல.
கடந்த 2015 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன் மற்றும் பிரகாஷ்ராஜ் உள்ளிட்டவர்களின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஓ காதல் கண்மணி இந்த திரைப்படம் துல்கர் சன்மானுக்கு மிகப்பெரிய வரவேற்பை தமிழ் மொழியிலும் பெற்றுக் கொடுத்தது என்றால் மிகையல்ல. சுமார் 6 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் உலக அளவில் சுமார் 50 கோடி ரூபாய் வசூல் செய்து மெகா ஹிட் திரைப்படமாக மாறியது.
அதேபோல பிரபல இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடித்த "மகாநதி" திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் துல்கர் சல்மான் நடித்திருந்தார். சுமார் 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் உலக அளவில் 84 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல கடந்த 2021 ஆம் ஆண்டு இயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் துல்கர் சல்மான் இந்திரஜித் சுகுமாரன் சோபிதா உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான குரூப் திரைப்படம் உலக அளவில் சுமார் 81 கோடி ரூபாய் வசூல் செய்தது. லக்கி பாஸ்கர் வெளியாவதற்கு முன்னதாக துல்கர் சல்மானுக்கு மிகப்பெரிய வசூல் சாதனை செய்த படம் இதுதான்.
இந்நிலையில் தற்பொழுது துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் திரைப்படம் OTT தளத்தில் வருகின்ற நவம்பர் 28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அவருடைய முதல் 100 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியாக இந்த லக்கி பாஸ்கர் திரைப்படம் மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.