இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா நிறைய மேடு பள்ளங்களை சந்தித்து வருகிறார். 2016இல் அறிமுகமாகி 2018 முதல் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அசத்திய அவர் கபில் தேவுக்கு பின் நல்ல ஆல் ரவுண்டர் கிடைத்து விட்டார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினார். ஆனால் அதன் பின் சந்தித்த காயத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டை முற்றிலுமாக தவிர்த்து வரும் அவர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டிலும் தொடர்ந்து விளையாடுவதில்லை.
அதனால் கடுமையான விமர்சனங்களை சந்தித்த அவர் 2024 டி20 உலகக் கோப்பையில் ஆல் ரவுண்டராக அபாரமாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அந்த சூழ்நிலையில் ஓய்வு பெற்ற ரோஹித் சர்மாவுக்கு பின் பாண்டியா புதிய டி20 கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாண்டியா ஃபிட்டாக இல்லை என்று கருதும் புதிய பயிற்சியாளர் கம்பீர் புதிய கேப்டனாக சூரியகுமாரை தேர்ந்தெடுத்துள்ளார்.
அத்துடன் துணை கேப்டன்ஷிப் பதவியையும் பறித்துள்ள தேர்வுக்குழு அடுத்து நடைபெறும் இலங்கை ஒருநாள் தொடரிலும் பாண்டியாவை நீக்கியுள்ளது. இந்நிலையில் ஃபிட்டாக இல்லாத காரணத்தால் பாண்டியா ஒருநாள் கிரிக்கெட்டில் 10 ஓவர்கள் முழுமையாக வீசுவதில்லை என்று ரவி சாஸ்திரி கவலை தெரிவித்துள்ளார். எனவே மீண்டும் ஃபிட்டாகி 10 ஓவர்கள் முழுமையாக வீசினால் இதே தேர்வுக்குழு 2025 சாம்பியன் ட்ராபியில் பாண்டியாவை தேர்ந்தெடுக்கும் என்று சாஸ்திரி கூறியுள்ளார்.
இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “பாண்டியா தொடர்ந்து விளையாடுவது மிகவும் முக்கியம். மேட்ச் ஃபிட்னஸ் மிகவும் முக்கியம் என்று நான் நம்புவேன். எனவே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவர் தொடர்ந்து முடிந்தளவுக்கு விளையாட வேண்டும். நாம் வலுவாக ஃபிட்டாக இருக்கிறோம் என்று நினைத்தால் பாண்டியா ஒருநாள் கிரிக்கெட்டுக்கும் வரலாம்”
“ஆனால் அதற்கு பவுலிங் முக்கியமாகும். 10 ஓவர்கள் வீச வேண்டிய ஒருநாள் கிரிக்கெட்டில் நீங்கள் மூன்று ஓவர்கள் மட்டும் வீசினால் அது அணியின் சமநிலையை பாதிக்கும். எனவே 8 – 10 ஓவர்கள் வீசி தம்முடைய வழியில் பேட்டிங் செய்தால் மீண்டும் அவரால் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட முடியும். எனவே இவை அனைத்தும் ஹர்திக் பாண்டியாவின் பயணத்தில் உள்ளது”
“ஏனெனில் அவருக்குத் தான் மற்றவர்களை விட தம்முடைய உடலைப் பற்றி நன்றாக தெரியும். மேலும் இந்தியாவுக்கு டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடி வெற்றியில் பங்காற்றிய விதம் அவருக்கு உத்வேகத்தை கொடுக்கும். எனவே மீண்டும் ஃபிட்டாகி மேலே வர அவருக்கு எந்த உத்வேகமும் தேவையில்லை” என்று கூறினார்.