Tamil News & polling
ஐசிசி 2024 டி20 உலக கோப்பையில் ஜூன் 27ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு கயானா நகரில் இரண்டாவது செமி ஃபைனல் நடைபெற்றது. அதில் லீக் மற்றும் சூப்பர் 8 சுற்றில் வெற்றி கண்ட இந்தியா மற்றும் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணிகள் கிரிக்கெட் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 9 ரன்னில் போல்ட்டாகி மீண்டும் ஏமாற்றத்தை கொடுத்தார். அப்போது வந்த ரிஷப் பண்ட் 6 (6) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் மறுபுறம் கேப்டன் ரோஹித் சர்மா பொறுப்புடன் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார்.
அவருடன் ஜோடி சேர்ந்த சூரியகுமார் யாதவ் 14 ஓவர்கள் வரை நங்கூரமாக நின்று 3வது விக்கெட்டுக்கு 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை காப்பாற்றினார். அதில் கேப்டன் ரோகித் சர்மா 6 பவுண்டரி 2 சிக்சருடன் அரை சதமடித்து 57 (39) ரன்களில் அவுட்டானார். அடுத்த சில ஓவரிலேயே மறுபுறம் அசத்திய சூரியகுமாரும் அரை சதத்தை நழுவ விட்டு 47 (36) ரன்னில் ஆட்டமிழந்தார்.
அவர்களைத் தொடர்ந்து மிடில் ஆர்டரில் ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி 23 (13) ரன்கள் விளாசி அவுட்டானார். ஆனால் அடுத்ததாக வந்த சிவம் துபே கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இறுதியில் ரவீந்திர ஜடேஜா அதிரடியாக 17 (9) அக்சர் படேல் 10 (6) ரன்கள் எடுத்ததால் 20 ஓவரில் இந்தியா 171/7 ரன்கள் குவித்தது.
இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக கிறிஸ் ஜோர்டான் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 172 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு கேப்டன் ஜோஸ் பட்லர் சரவெடியாக 23 (15) ரன்கள் விளாசி அச்சுறுத்தலை கொடுத்தார். அப்போது பிட்ச் ஸ்லோவாக இருப்பதை உணர்ந்த கேப்டன் ரோஹித் சர்மா வலது கை பேட்ஸ்மேனான பட்லருக்கு எதிராக இடதுகை ஸ்பின்னரான அக்சர் படேலை கொண்டு வந்தார்.
அந்த மாஸ்ட ஸ்ட்ரோக் வலையில் விழுந்த பட்லர் ரிவர்ஸ் ஸ்கூப் அடிக்க முயற்சித்து கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்த ஓவரிலேயே மறுபுறம் தடுமாறிய பிலிப்ஸ் சால்ட் 5 ரன்னில் பும்ரா வேகத்தில் போல்டானார். அப்போது அடுத்த ஓவரில் பேர்ஸ்டோவை கோல்டன் டக் அவுட்டாக்கிய அக்சர் படேல் அதற்கடுத்த ஓவரில் மறுபுறம் தடுமாறிய மொய்ன் அலியையும் 8 (10) ரன்னில் காலி செய்து மாயாஜாலம் நிகழ்த்தினார்.
அதனால் 46/4 என சரிந்த இங்கிலாந்துக்கு அடுத்ததாக சாம் கரண் 2, லிவிங்ஸ்டன் 11 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இறுதியில் ஜோப்ரா ஆர்ச்சர் 21* ரன்கள் எடுத்தும் 16.4 ஓவரில் 103 ரன்களுக்கு இங்கிலாந்தை ஆல் அவுட்டாக்கிய இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக அக்சர் படேல் 3, ஜஸ்ப்ரித் பும்ரா 2, குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
அதனால் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை நாக் அவுட் செய்து வீட்டுக்கு அனுப்பிய இந்தியா ஜூன் 29ஆம் தேதி நடைபெறும் மாபெரும் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள தகுதி பெற்றது. குறிப்பாக 2022 டி20 உலகக் கோப்பை செமி ஃபைனலில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை கொடுத்த இங்கிலாந்து அணியை இந்தியா பழிதீர்த்தது.
அத்துடன் 15 வருடங்கள் கழித்து டி20 உலகக்கோப்பை நாக் அவுட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வென்ற அணி என்ற சாதனையும் இந்தியா படைத்துள்ளது. இதற்கு முன் கடைசியாக 2009 டி20 உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான செமி ஃபைனலில் முதலில் பேட்டிங் செய்து இலங்கை வெற்றி பெற்றிருந்தது.

விஜய் Vijay DMK சென்னை Chennai திமுக TVK தவெக அண்ணாமலை Annamalai அதிமுக பாஜக கனமழை BJP தமிழக வெற்றிக் கழகம் Tamil Nadu TTV Dhinakaran MK Stalin எடப்பாடி பழனிசாமி ADMK திருமாவளவன் AIADMK மு.க.ஸ்டாலின் AMMK தமிழ்நாடு Thirumavalavan அன்புமணி ராமதாஸ் டிடிவி தினகரன் செங்கோட்டையன் Anbumani Ramadoss சீமான் முக ஸ்டாலின் Sengottaiyan PMK Seeman வடகிழக்கு பருவமழை Edappadi Palaniswami Tamilaga Vettri Kazhagam பாமக சட்டசபை தேர்தல் Congress