சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு மறுபரிசீலனைக்குப் பின்னர் ஏற்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பேரவைத் தேர்தலுக்கான பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த 30-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், மனுத் தாக்கலுக்கு கடைசி நாளான நேற்று (ஏப்.6) எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.முதல் நாளே முதல்வர் வேட்பாளர்களான திமுக மு.க. ஸ்டாலின், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக தலைவர் விஜய் ஆகியோர் அவரவர் போட்டியிடும் தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்ற நிலையில், மொத்தம் 7,000-க்கும் மேற்பட்டோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் அந்தந்த தொகுதிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர்களால் இன்று (ஏப். 7) காலை முதல் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன.இந்த நிலையில், வில்லிவாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் தவெக தேர்தல் பிரசாரப் பொதுச் செயலரான ஆதவ் அர்ஜுனா, அவரது மனைவி தொடர்புடைய நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட விவரங்களை பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடவில்லை என்று கூறி அவரது வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டது.பிரமாணப் பத்திரத்தில் ஆதவ் மனைவியின் பெயரில் உள்ள 35 நிறுவனங்களின் பெயர்களை குறிப்பிடவில்லை என்றும், வருமான வரிக் கணக்கில் காட்டாமல், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக ரூ. 1 கோடி கையிருப்பாக வைத்திருந்ததாகவும் சுயேச்சை வேட்பாளர்கள் எழுத்துப்பூர்வமாக புகாரளித்தனர். இதனால், சலசலப்பு உருவான நிலையில், மறுபரிசீலனைக்குப் பின், ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.தவெகவின் ஆர்.கே.நகர் வேட்பாளர் மரிய வில்சன், மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளர் பாலு, விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் உள்ளிட்டோரின் வேட்புமனுக்களும் நிறுத்தி வைக்கப்பட்டன. சிதம்பரம் தொகுதியின் தவெக வேட்பாளர் பாரியின் வேட்புமனுவில் எழுத்துப் பிழை இருப்பதாகவும் பல இடங்கள் நிரப்பாமல் விடுபட்டதாகவும் கூறி நிராகரிக்கப்பட்டதால், அங்கு சலசலப்பு உருவாகியுள்ளது.
« முந்தைய செய்தி (Previous)
பெரம்பூர் தொகுதியில் த.வெ.க. தலைவர் விஜயின் வேட்புமனு...உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்: