ஸ்ரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏவுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!
ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக எம்.எல்.ஏ. வி.ஜி. சரவணனுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கியுடன் கூடிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர் தெரிவித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை இந்த பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
திமுகவில் இணைய தனக்கு ரூ.30 கோடி முதல் ரூ.100 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக சரவணன் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும், இந்த பேரத்திற்கு இணங்க மறுத்ததால் தனக்குக் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கான ஆதாரங்களும் தன்னிடம் இருப்பதாகவும், இதில் திருநெல்வேலியைச் சேர்ந்த திரையரங்கு உரிமையாளர் ஒருவருக்குத் தொடர்பு உள்ளது எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதே வேளையில், இதே சரவணன் மீது ஏற்கனவே பெண் ஒருவர் அளித்த பாலியல் வன்கொடுமை புகார் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக இவர்மீது எடுத்த நடவடிக்கைகள் என்ன என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வந்தநிலையில், அதிலிருந்து பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே தற்போது பேரம் பேசப்பட்டதாகப் புதிய நாடகத்தை அரங்கேற்றுகிறார் என இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.