ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே முத்துராமலிங்க தேவர் சிலை அமைந்துள்ள இடத்தில் ஒவ்வொரு வருடமும் குருபூஜை விழா நடைபெறும். ஆன்மீகப் பற்றும், தேசப்பற்றும் கொண்டவராக விளங்கிய முத்துராமலிங்க தேவர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மீது அவர் அளவற்ற அன்பும், மரியாதையும் கொண்டு இருந்தார்.
சுபாஷ் சந்திரபோசுடன் சேர்ந்து நாட்டின் நலனுக்காக போராட்டங்களில் ஈடுபட்டு இருக்கிறார். குறிப்பாக ஆங்கிலேயர்களின் வாய் பூட்டு சட்டம் உள்ளிட்டவற்றால் பல இன்னல்களை சந்தித்த முத்துராமலிங்க தேவர், கடந்த 1963 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 (அவருடைய பிறந்த நாளும் அதே) மறைந்தார். இந்த நாளை அவரது ஜெயந்தி விழாவாகவு, குருபூஜை தினமாகவும் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மூன்றரை கோடி ரூபாய் மதிப்பீட்டில், 13 கிலோ எடை உள்ள தங்க கவசத்தை வழங்கினார்.
ஒவ்வொரு ஆண்டும் குருபூஜையின் போது, இந்த தங்க கவசம் மதுரை அண்ணா நகரில் உள்ள தனியார் வங்கி பெட்டகத்தில் இருந்து பெறப்படும். குறு பூஜை முடிந்தபின் வங்கி பெட்டகத்தில் கொடுத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் பொருளாளராக நியமிக்கப்பட்ட திண்டுக்கல் சீனிவாசன் ஒரு பக்கமும், தான் தான் பொருளாளர் என்று ஓபிஎஸ் ஒரு பக்கமும் தேவர் தங்க கவசம் பெற உரிமை கோரி உள்ளனர்.
இதற்கிடையே ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்பிடம் ஒப்படைப்பதற்கு பதிலாக கடந்த 2017-ம் ஆண்டு செய்தது போல மாவட்ட நிர்வாகத்திடமே தேவரின் தங்க கவசத்தை ஒப்படைக்க வங்கி நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குரு பூஜையில் பங்கேற்க பிரதமர் மோதி வரும் ஆக்டபர் 30ம் தேதி தமிழகம் வர உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. யார் அதிமுகவை கைப்பற்றுவது என்று ஓபிஎஸ்-இபிஎஸ்.,க்கு இடையே நடக்கும் உள்கட்சி பூசலில், பிரதமரின் தமிழக பயணம் புதிய திருப்பமாக அமையும் என்று சொல்லப்படுகிறது. மேலும், ஓபிஎஸ் தரப்பினர் தங்கள் பக்கமே பாஜக ஆதரவு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் சூழ்நிலையில், பிரதமர் மோடியுடன் ஓபிஎஸ் ஒன்றாக தேவரின் குரு பூஜையில் பங்கேற்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.