மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அக்டோபர் 25-ந் தேதி இரவு 7 மணிக்கு பின்னரே பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்.
சூரிய கிரகணமானது அக்டோபர் 25-ந் தேதி செவ்வாய்க்கிழமையன்று காலை 5.11 மணி முதல் மாலை 6.27 மணிவரை நிகழும். இதனையடுத்து பெரும்பாலான கோவில்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சூரிய கிரகண நாளில் திருப்பதி ஏழுமலையான் கோவில், காலை 8.11 மணி முதல் இரவு 7.30 மணிவரை மூடப்படும் என ஏற்கனவே தேவஸ்தான நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவில்
சூரிய கிரகண நாளில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அனைத்து கட்டண தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டு சர்வதரிசன பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். அதாவது இலவச தரிசனத்துக்கு மட்டும் இரவு 7.30 மணிக்கு பின் அனுமதி வழங்கப்படும். அதேபோல் கிரகண நாளில் சமையல் நடைபெறாது என்பதால் அன்னதானமும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
மதுரை மீனாட்சி அம்மன்
இதேபோல் சூரிய கிரகண நாளில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் மூடப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: அக்டோபர் 25-ந் தேதி - செவ்வாய் கிழமை சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த சூரிய கிரகணமானது மாலை 5.23 மணிக்கு ஆரம்பமாகி 6.23 மணிக்கு முடிவடைகிறது. அன்றைய தினம் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை அம்மன் சுவாமி மூலஸ்தானத்தில் நடை சாத்தப்படும்.
கிரகண கால அபிஷேகம்
சூரிய கிரகண நாளில் மதுரை மீனாட்சி அம்மன் சுவாமி மூலஸ்தான நடை சாத்தப்படுவதால் பொது மக்கள் அர்ச்சனை செய்யவோ, தரிசனம் செய்யவோ அனுமதி இல்லை. சூரிய கிரகணத்தன்று மத்திம காலத்தில் மாலை 5.51 மணிக்கு தீர்த்தம் கொடுக்கப்பட்டு, அம்மன், சுவாமிக்கு கிரகண கால அபிஷேகம் நடைபெறும்.
இரவு 7 மணிக்கு மேல் நடை திறப்பு
மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் கிரகண கால அபிஷேகம் முடிவடைந்து சந்திரசேகரர் புறப்பாடு நடைபெறும். அன்றைய தினம் அதாவது சூரிய கிரகணம் நிகழும் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். மேலும், கோலாட்ட உற்சவம், சாமி புறப்பாடு அன்று ஒரு நாள் மட்டும் இரவு 7 மணிக்குப்பின் நடைபெறும்.