தென் மாவட்டங்களில் கடந்த 16-ந்தேதி முதல் தொடர்ந்து மழை கொட்டி வருகிறது.
அதிலும் நேற்று முன்தினம் காலை 8.30 மணியில் இருந்து நேற்று காலை 8.30 மணி வரையில் தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களை மழை பதம் பார்த்தது.
இதனால் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மழை மற்றும் வெள்ள நீரால் தத்தளித்து கொண்டிருக்கின்றன.
இவ்வாறு மழை பெய்தது எப்படி? அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு அவர், 'இலங்கைக்கு தென் கிழக்கே நிலவி வந்த வளிமண்டல சுழற்சி குமரிக்கடல் பகுதிக்கு வந்து, பின்னர் குமரிக்கடல் பகுதிகளிலேயே வெகு நேரம் பயணித்தது. அதன் பின்னர் மணிக்கு 4 கி.மீ. வேகத்திலேயே தென் மாவட்டங்களையொட்டிய பகுதிகளை கடந்தது. இந்த வளிமண்டல சுழற்சி மற்றும் காற்றின் திசை வேக மாறுபாடு, காற்றில் ஈரப்பதம் அதிகளவில் குவிதல் போன்ற நிகழ்வுகளால் தென் மாவட்டங்களில் மழை கொட்டியுள்ளது' என்றார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், பொதுவாக புயல், தாழ்வு மண்டலம், தாழ்வுப் பகுதி போன்ற நிகழ்வுகள் வரும்போதுதான் அதிகனமழை இருக்கும். ஆனால் வளிமண்டல சுழற்சி உருவாகி, அதில் அதிகனமழை வரை இப்போது பெய்திருக்கிறது. இதுவரை இதுபோல் பெய்தது இல்லை எனவும் தெரிவித்தார்.