மருதுபாண்டியர் மற்றும் தேவர் குருபூஜைக்காக அக்டோபர் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், திருப்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கு அன்றைய தினம் விடுமுறை விடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா வருகின்ற 28, 29, 30 தேதிகளில் நடைபெற உள்ளது. அந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கவிருக்கிறார். இதற்காக 166 படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் பாதுகாப்பு படைகளை அனுப்ப டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குரு பூஜையின்போது போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் 12 யூனிட்டுகள் ஈடுபடுத்தப்படவுள்ளன. துப்பாக்கி, லத்தி, அடையாள அட்டையுடன் போலீசார் பணியில் ஈடுபட வேண்டும் என்றும் டிஜிபி தெரிவித்துள்ளார். வரும் 27ம் தேதி காளையார்கோவிலில் மருதுபாண்டியர் குருபூஜை நடைபெற உள்ளதால் அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு 13.7 கிலோ எடை கொண்ட தங்கத்தாலான கவசத்தை வழங்கினார். மதுரை தனியார் வங்கி பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ள தங்கக்கவசத்தை, ஆண்டுதோறும் அக்டோபர் 25ஆம் தேதி ஜெயந்தி விழாவுக்காக ஒப்படைப்பதை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, தங்கக்கவசமானது தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜனிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. இதனை முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் உள்ளிட்டோர் தேவர் சிலைக்கு அணிவித்தனர்.