காரைக்குடி:
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் இருந்து ஓரங்கட்டப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனக்கான இடத்தை உறுதி செய்வதற்காக பல்வேறு சட்டப்போராட்டங்களை முன்னெடுத்தார். ஆனால் அனைத்திலும் அவருக்கு பாதகமாகவே முடிவுகள் வந்தன. இதற்கிடையே அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்குக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையேயான பனிப்போர், கருத்து விமர்சனங்கள் தொடர்ந்தன.
ஒரு கட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மீண்டும் ஓ.பி.எஸ்., சசிகலா, தினகரன் ஆகியோரை அ.தி.மு.க.வில் சேர்க்கும் எண்ணமே இல்லை என்றும், அது முற்றிலும் சாத்தியமற்றது என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். ஆனாலும் சசிகலா, டி.டி.வி.தினகரனுடன் கைகோர்த்துள்ள ஓ.பன்னீர்செல்வம் கண்டிப்பாக அ.தி.மு.க. ஒன்றிணையும் என்று தொடர்ந்து கூறி வருகிறார்.