இந்திய கிரிக்கெட் அணி 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதுவரை நடைபெற்ற லீக் சுற்றில் அயர்லாந்தை முதல் போட்டியில் வீழ்த்திய இந்தியா 2வது போட்டியில் பரம எதிரி பாகிஸ்தானை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மறக்க முடியாத வெற்றியை பெற்றது. அதைத் தொடர்ந்து அமெரிக்காவையும் வீழ்த்திய இந்தியா கடைசிப் போட்டியில் கனடாவை எதிர்கொள்கிறது.
முன்னதாக இந்த தொடரில் முதல் 3 போட்டிகளிலும் சிவம் துபே எதிர்பார்த்த அளவுக்கு செயல்படாதது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஐபிஎல் 2024 தொடரில் கடைசிக்கட்ட போட்டிகளில் சொதப்பிய அவர் சிஎஸ்கே அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தார். அந்த வரிசையில் இத்தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் 3 (9) ரன்களுக்கு அவுட்டாகி பின்னடைவு ஏற்படுத்தினார்.
அதை விட அப்போட்டியில் முகமது ரிஸ்வான் கொடுத்த எளிதான கேட்சை கோட்டை விட்ட அவர் இந்தியாவின் வெற்றியை பாகிஸ்தானுக்கு பரிசளிக்க தெரிந்தார். நல்லவேளையாக பும்ரா மற்றும் இதர பவுலர்கள் சிறப்பாக பந்து வீசி இந்தியாவை வெற்றி பெற வைத்தனர். இந்நிலையில் இந்த உலகக் கோப்பையில் இதுவரை சிவம் துபே பவுலிங் செய்யவில்லை என்று ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.
எனவே பேட்டிங்கிலும் தடுமாறும் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சனை தேர்வு செய்ய வேண்டுமென ஸ்ரீசாந்த் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ரோகித் சர்மா – விராட் கோலி ஆகியோர் தொடர்ந்து ஓப்பனிங்கில் விளையாடலாம். அவர்களை மாற்றுவதற்கான காரணம் எனக்கு தெரியவில்லை. அக்சர் பட்டேல் நன்றாக பந்து வீசுகிறார். இருப்பினும் சிவம் துபே முதல் 2 போட்டிகளில் நன்றாக செயல்படவில்லை”
“பேட்டிங்கில் அவர் என்ன செய்வார் என்பது நமக்குத் தெரியும். ஆனால் இந்திய அணியில் நான் ஒரு மாற்றத்தை பார்க்க விரும்புகிறேன் சஞ்சு சாம்சன் அணிக்குள் வரவேண்டும். ஒருவேளை சிவம் துபே பந்து வீசவில்லையெனில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவர் எந்தளவுக்கு நன்றாக செயல்படுவார் என்பது நமக்குத் தெரியும். மற்றொரு நாளில் அவரிடம் நான் பேசினேன். அவர் வாய்ப்புக்காக பசியுடன் காத்திருக்கிறார்”
“நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் விக்கெட் கீப்பிங் தவிர்த்து சூப்பர்மேன் போல ஃபீல்டிங் செய்யக் கூடியவர். எனவே பாண்டியா மற்றும் ஜடேஜா ஆகியோருடன் மிடில் ஆர்டரில் அவர் விளையாடலாம் என்று நான் கருதுகிறேன். சேசிங் செய்யும் போது போட்டியை ஃபினிஷிங் செய்வதற்கு நம்மிடம் சேஸ் மாஸ்டர் விராட் கோலி இருக்கிறார்” என்று கூறினார்.