சோனம் ரகுவன்ஷியின் ஜாமினை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!
கடந்த ஆண்டு இந்தியாவையே உலுக்கிய, மேகாலயா தேனிலவு கொலைவழக்கின் முக்கிய குற்றவாளியான சோனம் ரகுவன்ஷிக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் பி.பி. வரலே ஆகியோர் அடங்கிய அமர்வு, சோனம் மீதான குற்றச்சாட்டுகள் “மிகவும் தீவிரமானவை” என்று குறிப்பிட்டு, விசாரணை நடவடிக்கைகள் முடிவடையவில்லை என்றால், ஆறு மாதங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் ஜாமினுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்து ஜாமினை ரத்து செய்தனர்.
ஜாமின் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சோனம் காவல்துறையிடம் சரணடைவதற்கு 3 வார கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த சோனம் ரகுவன்ஷி மற்றும் ராஜா ரகுவன்ஷிக்கு கடந்த ஆண்டு மே.11ம் தேதி திருமணம் நடைப்பெற்றது.
இதனைத்தொடர்ந்து மே 20ம் தேதி மேகாலயாவின் சோஹ்ராவிற்கு இருவரும் தேனிலவுக்கு சென்றனர்.
தேனிலவுக்கு சென்றவர்கள் மே.23அன்று தாங்கள் தங்கியிருந்த விடுதியில் இருந்து வெளியேறினர்.
ஆனால் வீடு திரும்பாததால் உறவினர்கள், இருவரும் காணவில்லை என போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கிய போலீசார், ஜூன் 2ம் தேதி 200 அடி பள்ளத்தில் இருந்து ராஜா ரகுவன்ஷியை பிணமாக கண்டறிந்தனர்.
இதனையடுத்து அவரது மனைவி சோனம் என்ன ஆனார் என கேள்வி எழு, போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பின்னர் தொலைபேசி சிக்னலை வைத்து சோனத்தை உ.பி.யின் காசிபூரில் கண்டறிந்தனர். அங்கு அவரிடம் போலீசார் விசாரிக்க முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்.
தொடர் விசாரணையில் தனது காதலனுடன் சேர்ந்து கூலிப்படையை அமைத்து ராஜா ரகுவன்ஷியை சோனம் போட்டு தள்ளியது தெரியவந்தது. இதனையடுத்து சோனமும், அவளது காதலர் ராஜ் சிங் குஷ்வாஹாவும் கைது செய்யப்பட்டனர். சுமார் 10 மாதங்கள் நீதிமன்றக் காவலுக்கு பிறகு, கடந்த ஏப்ரல் 27ம் தேதி சோனத்திற்கு ஷில்லாங் மாவட்ட நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
சோனத்தின் கைதுக்கான காரணங்களை புலனாய்வு அமைப்பு சரியாகத் தெரிவிக்கத் தவறிவிட்டது என்று, நடைமுறை குறைபாட்டை சுட்டிக்காட்டி நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
காவல்துறையின் கைது ஆவணங்களில் கொலைக்கான சட்டப்பிரிவான 103(1)-க்கு பதிலாக 403(1) எனத் தட்டச்சுப் பிழையாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் மேகாலயா அரசு இந்த ஜாமினை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
ஆனால் உயர் நீதிமன்றம் அந்த மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்து, ஜாமினை உறுதி செய்தது. இதை எதிர்த்து மேகாலயா அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் அவசர மேல்முறையீடு செய்தார்.
இம்மாத தொடக்கத்தில் இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஜாமினை ரத்து செய்ய மறுத்து விசாரணையை ஒத்திவைத்தது.
அதனைத்தொடர்ந்து இந்த வாரத் தொடக்கத்தில் மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது சரணடைவது அல்லது ஜாமினை ரத்து செய்வது என்ற இரண்டு வாய்ப்புகள் சோனத்திற்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்றைய விசாரணையில் ஜாமின் ரத்து செய்யப்பட்டுள்ளது.