தன்னையும், குழந்தையையும் கைவிட்டு சென்றவருக்கு அரசு வேலையா?- கரூரில் பலியான சிறுவனின் தாய் வேதனை

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று தமிழக முதலமைச்சர் விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தை சேர்ந்த 32 பேருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலைக்கான பணி நியமன ஆணை வழங்குகிறார்.

இதற்காக தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் கலெக்டர் அலுவலக அரங்கத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். அப்போது ஒரு இளம்பெண் தனக்கு அனுமதி அளிக்காமல் தன்னையும், குழந்தையையும் கைவிட்டு சென்ற கணவரை அதிகாரிகள் அனுமதித்து உள்ளதாக குற்றம்சாட்டினார்.

மேலும், அவர் கண்ணீர்மல்க கூறியதாவது:-

எனது பெயர் திருவளர் செல்வி. என் கணவர் ரகுநாதன். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே, என்னையும், குழந்தையையும் தவிக்கவிட்டுவிட்டு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு சென்றுவிட்டார்.

எனது மகன் சனுஜ் வர்ஷனை சிறு வயது முதல் என் தாயின் உதவியுடன் வளர்த்து வந்தேன். இந்தநிலையில் கரூர் சம்பவத்தில் எனது சகோதரியுடன் சென்ற எனது மகன் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழக அரசு மற்றும் முதல்வர் விஜய் தரப்பில் இருந்து எனக்கு முறையான நிவாரண உதவிகள் அனைத்தும் சட்டப் பூர்வமாக வழங்கப்பட்டது.

ஆனால், எனது மகனின் இறுதி சடங்கு மற்றும் இதர நிகழ்வுகளின்போது அதிகாரிகளின் செயல்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது. உயிரிழந்த குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதை அறிந்து இங்கு வந்தேன்.

ஆனால், அதிகாரிகள் உள்ளே என்னை அனுமதிக்கவில்லை. எனது கணவர் கூட்ட அரங்கில் அமரவைக்கப்பட்டு உள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக பிள்ளையை கண்டு கொள்ளாத, ஒரு நாள்கூடப் பள்ளிக்கு அழைத்து செல்லாத அவருக்கு எந்த அடிப்படையில் அதிகாரிகள் அரசு வேலை வழங்குகிறார்கள்?.

எனக்கு என்று ஆம்பளை துணை யாரும் இல்லை. நியாயம் கேட்க போனால் யாரும் முறையான பதில் சொல்ல மறுக்கிறார்கள். எனக்கு நீதி வழங்க வேண்டும் என்றார்.

பகிரவும் (Share):

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel