பிரதீப் ரங்கநாதன்- சந்திரசேகர் ஏலெட்டி கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படம்!
'லவ் டுடே' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் முன்னணி இளம் நட்சத்திரமாக உருவெடுத்துள்ள பிரதீப் ரங்கநாதன், தனது அடுத்த புதிய திரைப்படத்திற்காகத் தெலுங்குச் சினிமாவின் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் உடன் கைகோர்த்துள்ளார்.
இயக்குநர் சந்திரசேகர் ஏலெட்டி
வித்தியாசமான கதைக் களங்களைக் கொண்டு படங்களை இயக்குவதில் வல்லவரான பிரபல தெலுங்கு இயக்குநர் சந்திரசேகர் ஏலெட்டி இத்திரைப்படத்தை இயக்க உள்ளார். இவர் தெலுங்கில் 'ஐதே', 'அனுக்கோகுண்டா ஒக ராஜு', 'பிரயாணம்' மற்றும் 'செக்' போன்ற தரமான படங்களைக் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
செப்டம்பரில் படப்பிடிப்பு..
பிரதீப் ரங்கநாதன் மற்றும் சந்திரசேகர் ஏலெட்டி கூட்டணியில் உருவாகும் இந்தத் திரைப்படத்தின் ஆரம்பகட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படத்தின் முறையான படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு..
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இத்திரைப்படம் பான்-இந்தியா படமாக உருவாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய முழு விவரங்களுடன் கூடிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.