2019-ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டி, 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி, 2022 டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதி போட்டி, 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் 2023-50 ஓவர் ஒருநாள் கோப்பை இறுதிப்போட்டி என ஐந்து உலக கோப்பை முக்கிய போட்டிகளில் இறுதிவரை சென்று கோட்டை விட்ட இந்திய அணி இம்முறை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்ஸில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை வென்றாக வேண்டும் என்ற லட்சியத்துடன் விளையாடி வருகிறது.
இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்றுள்ள வேளையில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணியானது அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் போட்டிகள் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றிருக்கிறது.
இந்த தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்படுவதால் நிச்சயம் உலக கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
இந்நிலையில் இந்த டி20 உலககோப்பை தொடருக்கான இந்திய அணியில் முக்கிய சில மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக ஜெய்ஸ்வால் வெளியில் அமர வைக்கப்பட்டு ரோஹித் சர்மாவுடன் விராட் கோலி துவக்க வீரராக விளையாடி வருவதோடு மூன்றாவது வீரராக ரிஷப் பண்ட் 3 ஆவது வீரராக விளையாடி வருவது அனைவரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த தொடர் முழுவதும் ரிஷப் பண்ட்தான் மூன்றாம் இடத்தில் விளையாடுவார் என்று பேட்டிங் பயிற்சியாளரான விக்ரம் ரத்தோர் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ரிஷப் பண்ட் தான் எங்கள் அணியின் தற்போதைய நம்பர் 3 வீரர். அவர் அந்த இடத்தில மிகவும் நன்றாக பேட்டிங் செய்கிறார். கடந்த சில போட்டிகளாகவே அவர் விளையாடி வரும் விதம் மூன்றாவது இடத்தில் அவரை நீடிக்க வைக்க உதவுகிறது.
மூன்றாவது வீரராக ரிஷப் பண்ட் களம் இறங்கும்போது டாப் ஆர்டரில் ஒரு இடது கை ஆட்டக்காரர் கிடைக்கிறார். அது மட்டுமின்றி கூடுதல் ஆள்ரவுண்டர்களும் பிளேயிங் லெவனில் இடம் பிடிக்க வசதி கிடைக்கிறது. அதன் காரணமாகவே ரிஷப் பண்ட் மூன்றாவது வீரராக களமிறங்கி வருகிறார். இந்த டி20 உலக கோப்பை தொடர் முழுவதுமே அவர் தான் 3 ஆவது வீரராக விளையாடுவார் என விக்ரம் ரத்தோர் கூறியது குறிப்பிடத்தக்கது.