பண்ருட்டி அருகே ஆடுகளத்தில் கபடி வீரர் உயிரிழந்தார்.
பண்ருட்டி அடுத்த காடாம் புலியூர் பெரியபுறங்கணி முருகன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சஞ்சய் என்ற விமல்ராஜ் (21). இவர், சேலம் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 2-ம்ஆண்டு படித்து வந்தார். சேலத்தில் உள்ள கபடி அகாடமி ஒன்றில் கபடி பயிற்சி பெற்றுவந்தார்.
பண்ருட்டியை அடுத்த மானடி குப்பத்தில் நேற்று முன் தினம் நள்ளிரவு நடை பெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிரணியைச் சேர்ந்தவர்கள், அவரை பிடித்தபோது, கீழே விழுந்தார். மீண்டும் எழமுயற்சித்தபோது, எழ முடியாமல் மயங்கி விழுந்தார். சக கபடி வீரர்கள் அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவரைபரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். முத்தாண்டிக்குப்பம் போலீஸார் விமல்ராஜ் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "கடலூர் மாவட்டம் பண்ருட்டி மானடிக்குப்பத்தில் நடைபெற்ற கபாடி போட்டியின் போது காடாம்புலியூரைச் சேர்ந்த விமல்ராஜ் என்ற வீரர் மார்பில் அடிபட்டு உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அவரது குடும்பத்திற்கு இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். விமல்ராஜ் ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்தவர். கபாடிப் போட்டிகளில் பதக்கங்களை வென்றவர் சேலத்தில் பட்டப்படிப்பு படித்து வந்த விமல்ராஜ் தான் அவரது குடும்பத்தின் எதிர்கால நம்பிக்கையாக இருந்தார். அவரது எதிர்பாராத மறைவால் அவரது குடும்பம் நிலைகுலைந்து போயிருக்கிறது! விளையாட்டு வீரர் விமல்ராஜை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்!" என்று பதிவிட்டுள்ளார்.