நடிகராக இருந்து நேரடியாக அரசியலுக்கு வரவில்லை! 1990 முதல் மக்கள் பணி! விஜய் பேச்சு
1990 முதல் மக்களுக்கு பல்வேறு நலப்பணிகளைச் செய்தே அரசியலுக்கு வந்துள்ளதாக பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் பேசினார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதல்வர் விஜய் பதிலளித்து சட்டப்பேரவையில் பேசி வருகிறார்.
அப்போது அவர் பேசுகையில், "ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் நன்றி. எதிர்த்துப் பேசினால்தான் எதிர்க்கட்சி என நினைத்துப் பேசியவர்களுக்கும் நன்றி. நான் ஒன்றும் சாதாரணமாக அரசியலுக்கு வந்துவிடவில்லை. சாதாரண நடிகனாக இருந்து உயர்ந்த நிலைக்குச் சென்றதுக்கு காரணம் தமிழக மக்களின் அன்பும் அரவணைப்பும். அது கடவுளும் மக்களும் தந்த மிகப்பெரிய வரம். 1990 களில் ரசிகர் மன்றம் ஆரம்பித்து மக்களுக்கு பணிகளைச் செய்தோம். அடுத்து நற்பணி மன்றமாகவும் விஜய் மக்கள் இயக்கமாகவும் மாறியது.
2008ல் ஈழத்தமிழருக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினோம். கரோனா, வெள்ள நிவாரணம், கல்வி, சமூகப் பணிகள் என பல வழிகளில் மக்களுக்கு துணையாக இருந்தோம். ஊழல் எதிர்ப்பு, கல்வி, அரசியல் என படங்களின் மூலமாகவும் பேசியிருக்கிறேன். அதனால் அந்த அரசியல் படங்கள் சந்திக்காத பிரச்னை இல்லை. 2011ல் மீனவர்களுக்கு ஆதரவாக ஒரு பொதுக்கூட்டம் நடத்தினோம்.
2017ல் ஜல்லிக்கட்டு போராட்டம், 2018ல் ஸ்டெர்லைட் போராட்டத்தில் நேரில் சந்தித்து பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவு தெரிவித்தோம். 2021 உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றோம். கல்வி விருது விழா நடத்தி வருகிறோம்.
அதன்பின்னர் 2024ல் கட்சி ஆரம்பித்து, 2 பெண் கொள்கைத் தலைவர்களைக் கொண்ட கட்சியாக உருவெடுத்து மாநாடுகளை நடத்தி இன்று ஆட்சியில் அமர்ந்திருக்கிறோம். அது அவ்வளவு சாதாரணமானதாக இல்லை. பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையில் உடன்பாடு இல்லை என்று வெளிப்படையாக கூறினோம். எல்லோரும் கட்சி ஆரம்பித்து ஒவொருவரின் வீட்டுக்குள் செல்வார்கள். ஆனால் நான் ஒவ்வொரு வீட்டுக்குள் போனபிறகுதான் கட்சியை ஆரம்பித்தேன். கரூர் சம்பவத்தில் எங்கள் மேலேயே பலி போட்டதுலாம் வேற லெவல். அரசியல் இவ்வளவு மோசமாக இருக்குமா தெரியுமா?" என்று பேசினார்.