மகாராஷ்டிரா மாநிலம் மால்வனில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் கடந்த டிசம்பர் 4-ந்தேதி பிரதமர் மோடி திறந்து வைத்த மன்னர் சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலை எட்டே மாதத்தில் கடந்த 26-ந்தேதி இடிந்து விழுந்தது. இந்த விவகாரம் அரசியல் ரீதியாக பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த பிரதமர் மோடி, இந்த அசம்பாவிதத்துக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில் மகா விகாஸ் அகாதி கூட்டணி எதிர்க்கட்சிகள் இன்று தெற்கு மும்பையில் உள்ள ஹூதாமா சவுக்கு முதல் கேட் வே ஆப் இந்தியா வரை கண்டன பேரணியில் ஈடுபட்டனர். இதில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் (எஸ்.பி.) சரத் பவார், சிவசேனா தலைவர் (யூ.பி.டி.) உத்தவ் தாக்கரே, மாநில காங்கிரஸ் தலைவர் நானே படோல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஊர்வலத்தில் சென்றவர்கள் சிவாஜி சிலை இடிந்து விழுந்ததைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.