விவாகரத்து செய்யாமல் 2வது திருமணம் செய்தால் 20% சம்பளம் பிடித்தம் செய்யப்படும் - ஊழியர்களுக்கு அசாம் அரசு எச்சரிக்கை
அசாம் மாநிலத்தில் பலதார மணமுறையை தடை செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன் ஒருபகுதியாக மாநிலத்தின் அரசு ஊழியர்கள் தங்களது முதல் மனைவியை சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்துகொண்டால் அவர்களின் ஊதியத்திலிருந்து 20% பிடித்தம் செய்யப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
பிடித்தம் செய்யப்படும் அந்தத் தொகை நேரடியாக முதல் மனைவியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இருப்பினும் இதற்காக முதல் மனைவி அரசிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தாலும், சம்பளப் பிடித்தம் தொடரும். சட்டரீதியான நடவடிக்கைகள் முடியும் வரை முதல் மனைவி எந்தச் சிரமங்களையும் சந்திக்காமல் இருப்பதற்காக, அவருக்கு நிதி உதவி வழங்குவதே தங்களின் நோக்கம் என்று அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
இந்த முடிவை தனியார் துறை ஊழியர்களுக்கும் செயல்படுத்தத் திட்டமிட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே அசாமில் அரசு ஊழியர்கள் தங்களின் வயதான பெற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி உடன்பிறப்புகளை புறக்கணித்தால் அவர்களது சம்பளத்தில் இருந்து 10 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு, அந்தத் தொகை நேரடியாக அவர்களின் பெற்றோர் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.