Tamil News & polling
அதிமுகவை காப்பாற்றமும் எம்ஜிஆரின் பெயரை காப்பாற்றவும் சிறிய தொண்டனாக என்னால் ஆன முயற்சியை செய்திருக்கிறேன் என்று கே.பாக்யராஜ் கூறியுள்ளார். அனைவரும் ஒன்று பட்டு கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று மயிலாப்பூரில் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்த கே.பாக்யராஜ் கூறியுள்ளார்.
அதிமுக பொதுக்குழு விவகாரம் சூடுபிடித்துள்ளது. தீர்ப்பு யாருக்கு சாதகமாக வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ஒருபக்கம் இருந்தாலும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் ஓ.பன்னீர் செல்வம். எடப்பாடி பழனிச்சாமி மட்டுமல்லாது டிடிவி தினகரன், சசிகலா என அனைவரும் அதிமுக என்ற ஒரு குடையின் கீழ் வரவேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.
ஓ.பன்னீர் செல்வத்தின் அழைப்பை நிராகரித்து விட்டார் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளார்.
அதிமுகவின் பெரும்பான்மை தொண்டர்கள், மக்கள் என்ன நினைக்கிறார்களே அதை பிரதிபலிக்க வேண்டும். கட்சியில் எந்தவேலையும் செய்ய மாட்டார் ஆனால் எப்போதும் பதவியில் இருக்க வேண்டும் என்று நினைப்பார் ஓ.பன்னீர் செல்வம். எப்படியாவது பதவியில் இருக்க வேண்டும் என்றால் அடிக்கடி அழைப்பு விடுப்பார். தானும் தனது மகனும் பதவியில் இருக்க வேண்டும் என்று நினைப்பவர் என்பது எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டு.
கட்சியில் உயர் பொறுப்பில் இருந்த ஓ.பன்னீர் செல்வம் அநாகரீகமான முறையில் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டால் எப்படி இணைய முடியும். அதிமுகவை தன்வசப்படுத்த நினைப்பவர்களுடன் ஒருபோதும் இணைய முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
இதனிடையே அதிமுக ஒருங்கிணைப்பாளர் சென்னை ராயப்பேட்டையில் தனியார் விடுதியில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் வைத்திலிங்கம் ஆகியோருடன் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை மேற்கொண்டார். விழுப்புரம், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகளும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் இன்று தனியார் விடுதிக்கு சென்று ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசினார். சந்திப்புக்குப்பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். அதிமுக தொண்டர்களும், எம்ஜிஆர் ரசிகர்களும் புத்துணர்ச்சி பெறும் அளவிற்கு இந்த கட்சி பலம் பெறும். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய தலைவர்கள் இந்த கட்சியை எப்படி விட்டு விட்டு சென்றார்களோ, அதே போல அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
அதிமுக நிறுவனர் தலைவர் எம்ஜிஆர் உடல் நலமில்லாமல் இருந்த போது அரசியல் மேடைகளில் பேசியுள்ளேன். இப்போது அவருடைய பேரை காப்பாற்றவும், கட்சியைக் காப்பாற்றவும் சிறிய தொண்டனாக என்னாலான முயற்சியை மேற்கொண்டுள்ளேன். அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று பேசியிருக்கிறோம். எல்லோரும் ஒன்று சேர்ந்து கட்சியை வலுப்படுத்துவார்கள். அதிமுகவில் முறையாக இணைந்து செயல்படுவேன் என்று கூறினேன். எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து பேசுவேன். அதற்கும் நான் தயாராக இருக்கிறேன் என்று பாக்யராஜ் கூறினார்.

விஜய் Vijay DMK சென்னை Chennai திமுக TVK தவெக அண்ணாமலை Annamalai அதிமுக பாஜக கனமழை BJP தமிழக வெற்றிக் கழகம் Tamil Nadu TTV Dhinakaran MK Stalin எடப்பாடி பழனிசாமி ADMK திருமாவளவன் AIADMK மு.க.ஸ்டாலின் AMMK தமிழ்நாடு Thirumavalavan அன்புமணி ராமதாஸ் டிடிவி தினகரன் செங்கோட்டையன் Anbumani Ramadoss சீமான் முக ஸ்டாலின் Sengottaiyan PMK Seeman வடகிழக்கு பருவமழை Edappadi Palaniswami Tamilaga Vettri Kazhagam பாமக சட்டசபை தேர்தல் Congress