Tamil News & polling
தகாத உறவு வெளியே தெரியாமல் இருக்க, மகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பக்கத்து வீட்டுக்காரருக்கு எதிராக புகார் அளித்த பெண் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதியவும், சிறுமிக்கு வழங்கப்பட்ட ரூ.2 லட்சம் இழப்பீட்டை திரும்பப் பெறவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மதிச்சியத்தைச் சேர்ந்தவர் ராஜமோகன். இவர் மீது கடந்த 2019-ல் பக்கத்து வீட்டைச் சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போக்சோ வழக்கில் ராஜமோகனை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கை, மதுரை போக்சோ நீதிமன்றம் விசாரித்து, ராஜமோகனுக்கு 5 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து கடந்தாண்டு தீர்ப்பளித்தது.
தண்டனையை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் ராஜமோகன் மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்து, நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
இந்த வழக்கில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமி மாற்றி மாற்றி வாக்குமூலம் அளித்துள்ளார். புகார், வாக்குமூலம், நீதிமன்ற விசாரணையில் சிறுமியின் சாட்சிகள் முரண்படுகின்றன. சிறுமியின் தாயாரின் 2-வது கணவரை மனுதாரர் தாக்கியுள்ளார். இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இதை மறைத்துள்ளனர். மருத்துவ ஆதாரமும் இல்லை. இவற்றிலிருந்து மனுதாரர் மீது அளிக்கப்பட்ட புகாரில் உண்மையில்லை என்பது தெரிகிறது.
மேலும், மனுதாரர் மீதான குற்றச்சாட்டை சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டது. சிறுமியின் தாயார் மற்றும் அவரது 2-வது கணவர் இடையிலான தகாத உறவிலிருந்து தப்பிக்க மனுதாரர் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிறுமியும் உள்நோக்கம் தெரியாமல் மனுதாரர் மீது குற்றம் சுமத்தியுள்ளார். விசாரணை அதிகாரி நியாயமாக விசாரணை நடத்தாமல் போலியான ஆவணங்களை தயாரித்துள்ளார்.
அந்த ஊரைச் சேராதவர்கள் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் வெற்றுத்தாள்களில் கையெழுத்து பெற்றுள்ளனர். குற்றம் நிரூபிக்கப்படாததால், வழக்கிலிருந்து மனுதாரர் விடுதலை செய்யப்படுகிறார். இந்த வழக்கில் பொய் புகார் அளிக்கப்பட்டதற்காக சிறுமியின் தாயார் மீது போக்சோ சட்டத்தின் 22-வது பிரிவின் கீழ் மதுரை மாநகர காவல் ஆணையர் வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த வழக்கில் கீழமை நீதிமன்றத்தின் தண்டனை குறித்து மனுதாரரிடம் கேட்டபோது, ‘நான் எந்த தவறும் செய்யவில்லை. என் மனைவி புற்றுநோயாளி. என் மகளுக்கு மூளை வளர்ச்சி குறைவு. நான்தான் அவர்களைப் பார்க்க வேண்டும். இதனால் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும்’ என்று அவர் கூறியுள்ளார்.
இதைக் கருத்தில்கொண்டு, மனுதாரருக்கு பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டு நிதியிலிருந்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு ரூ.50 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும். இந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் சிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளதால், சிறுமி இழப்பீடு பெற உரிமையற்றவர். எனவே, அவருக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை திரும்பப் பெறவேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

விஜய் Vijay DMK சென்னை Chennai திமுக TVK தவெக அண்ணாமலை Annamalai அதிமுக பாஜக கனமழை BJP தமிழக வெற்றிக் கழகம் Tamil Nadu TTV Dhinakaran MK Stalin எடப்பாடி பழனிசாமி ADMK திருமாவளவன் AIADMK மு.க.ஸ்டாலின் AMMK தமிழ்நாடு Thirumavalavan அன்புமணி ராமதாஸ் டிடிவி தினகரன் செங்கோட்டையன் Anbumani Ramadoss சீமான் முக ஸ்டாலின் Sengottaiyan PMK Seeman வடகிழக்கு பருவமழை Edappadi Palaniswami Tamilaga Vettri Kazhagam பாமக சட்டசபை தேர்தல் Congress