காவலர்கள், சீருடை அலுவலர்கள் 180 பேருக்கு அண்ணா பதக்கம் - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
காவல் - தீயணைப்பு துறையில் சிறப்பாக பணியாற்றிய 180 பேருக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட உள்ளதாக தமிநாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை, ஊர்க்காவல் படை, விரல்ரேகைப் கூடம் மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் சார்நிலை அலுவலர்களிள் சிறப்பான பணிகளை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15-ந் தேதி முதலமைச்சர் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், இந்த ஆண்டு காவல்துறையில் தலைமைக் காவலர் முதல் காவல் கண்காணிப்பாளர் வரையிலான 138 நபர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில், தீயணைப்பு வீரர் முதல் துணை இயக்குநர் வரையிலான 20 நபர்களுக்கும்;
சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறையில், முதல்நிலை சிறைக்காவலர் முதல் துணை சிறை அலுவலர் வரையிலான 10 நபர்களுக்கும், ஊர்க்காவல் படையில், ஊர்க்காவல் படைவீரர் முதல் படைத் தளபதி வரையிலான 5 நபர்களுக்கும்;
விரல்ரேகைப் பிரிவில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களுக்கும் மற்றும் தடய அறிவியல் துறையில் 4 அலுவலர்களுக்கும், அவர்களின் மெச்சத்தக்க பணியினை அங்கீகரிக்கும் வகையில் “தமிழ்நாடு முதலமைச்சரின் அண்ணா சிறப்புப் பதக்கங்கள்” வழங்கிட, முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.
மேலும், கடந்த மே மாதம் 19-ந் தேதி அன்று நாகர்கோவில் லெமூரியா கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த கணபதிபுரத்தைச் சேர்ந்த இரு குழந்தைகள் ராட்சத கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு, அதில் 9 வயதுடைய வைஷ்ணவி என்ற சிறுமியை மட்டும் பொதுமக்கள் காப்பாற்றிய நிலையில், 9 வயதுடைய சிறுவன் சைலேஷ் கட லுக்குள் சுமார் 100 மீட்டர் தொலைவில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான்.
இந்நிலையில், தனது இரவுப் பணியை முடித்து விட்டு, வீடு திரும்பி கொண்டிருந்த நாகர்கோவில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு ஓட்டுநர் ஆர். ராஜசேகர் மேற்படி தகவலை கேள்விப்பட்டவுடன் ராஜாக்கமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துவிட்டு, உடனடியாக கடற்கரைக்கு விரைந்து சென்று அங்கிருந்த உயிர்காக்கும் மிதவையை பயன்படுத்தி, தன் சொந்த பாதுகாப்பை பற்றி கவலைப்படாமல், கடலில் நீந்தி சென்று அச்சிறுவனை மீட்டுக் கரைக்கு கொண்டு வந்து அச்சிறுவனின் உயிரை காப்பாற்றினார்.
கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர், ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் அன்னாரது துணிச்சலான செயலை வெகுவாக பாராட்டியுள்ளார்கள். இவரின் துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்பு செயலை பாராட்டி இவருக்கு “முதலமைச்சரின் தீயணைப்பு பணிக்கான அண்ணா வீரதீர பதக்கம்” வழங்கிட முதலமைச்சர் விஜய் ஆணையிட்டுள்ளார்.
மேற்கண்ட பதக்கங்கள், முதலமைச்சர் விஜய்யால் பின்னர் விழாவில் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel