கிராண்ட் செஸ் தொடரின் இறுதிச் சுற்று: அமெரிக்காவில் கோலாகலத் தொடக்கம்!
கிராண்ட் செஸ் தொடரின் இறுதி சுற்று அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் இன்று தொடங்கி 27-ந் தேதி வரை நடக்கிறது.
இந்த தொடரின் முதல் 5 கட்ட போட்டிகள் முடிவில் டாப்-4 இடங்களை பிடித்த பிரக்ஞானந்தா (இந்தியா), வெஸ்லி சோ, பேபியானோ கருணா (இருவரும் அமெரிக்கா), வின்சென்ட் கீமர் (ஜெர்மனி) ஆகியோர் இறுதி சுற்றுக்கு வந்துள்ளனர்.
இறுதி சுற்றின் ஒரு அரைஇறுதியில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா, வின்சென்ட் கீமரை சந்திக்கிறார். மற்றொரு அரைஇறுதியில் வெஸ்லி சோ- பேபி யானோ கருணா மோதுகின்றனர்.
ஒவ்வொரு அரை இறுதியும் 2 ஆட்டங்கள் கொண்டதாகும். கிளாசிக்கல் முறையிலான இந்த போட்டியில் முதல் 40 நகர்வுக்கு 90 நிமிடங்கள் ஒதுக்கப்படும்.
எஞ்சிய ஆட்டத்துக்கு 30 நிமிடங்களும், அதன் பிறகு ஒவ்வொரு நகர்வுக்கும் கூடுதலாக 30 வினாடியும் வழங்கப்படும். அரை இறுதியில் சமநிலை ஏற்பட்டால் முடிவை அறிய ரேபிட் மற்றும் பிளிட்ஸ் முறையில் டைபிரேக்கர் கடைபிடிக்கப் படும்.
போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.4.30 கோடியாகும். சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு ரூ.1.91 கோடியும், 2-வது இடம் பெறுபவருக்கு ரூ.1.19 கோடியும் பரிசாக அளிக்கப்படும்.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel