மகாராஷ்டிராவில் தயிர் பானை உடைக்கும் போட்டியில் 7 வயது சிறுவன் உட்பட 2 பேர் பலி
மும்பை மலாட் பகுதியை இளைஞர் குழுவினர், கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடும் விதமாக முன் அனுமதியின்றி தாங்களாகவே திருவிழா ஒன்றை நேற்று கொண்டாடினர். அப்போது அந்த திருவிழாவில் தயிர் பானை உடைக்கும் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியை காண்பதற்காக மலாட் கிராமத்தில் திரளான மக்கள் ஒன்றாக கூடினர். அப்போது இளைஞர்கள் ஒன்றாக பிரமிட் வடிவத்தில் நின்று, கயிற்றில் தொங்கவிடப்பட்டிருந்த பானையை உடைக்க முயன்றனர்.
இந்த போட்டியை காண்பதற்காக அந்த கூட்டத்தில் ஏழு வயது சிறுவன் நின்று கொண்டிருந்தான்.
தயிர் பானையை தாங்கி கொண்டிருந்த கயிறு, ஒரு மரத்திற்கும் தரைத்தள கட்டிடத்தின் செங்கல் தூணுக்கும் இடையில் கட்டப்பட்டு இருந்தது.
அந்த சமயத்தில் இளைஞர்கள் பானையை உடைக்க முயன்றபோது, அங்கே இருந்த தூண் ஒன்று சரிந்து கூட்டத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மேல் விழுந்தது.
இதையடுத்து தூண் சரிந்து கூட்டத்தில் நின்று கொண்டிருந்த சிறுவனின் தலை மீது விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்தவர்கள் சிறுவனை மீட்டு, மால்வானி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.
இதேபோன்று மகராஷ்டிராவில் உள்ள புனே நகரத்தில் நடைபெற்ற தயிர் பானை உடைக்கும் போட்டியில், ஒரு இரும்பு சட்டம் சரிந்து விழுந்ததில், சல்மா சலாவுதீன் பதான் என்ற பெண் உடல் நசுங்கி உயிரிழந்தார்.
இந்த துயர சம்பவம் குறித்து மகாராஷ்டிர துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், மனித பிரமிடுகளை அமைக்கும் போது, போட்டியில் கலந்துகொள்பவர்கள் அரசாங்கத்தின் விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று கூறினார்.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel