வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் தண்டனைக்குரிய குற்றம் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்
தேசியப் பாடலான வந்தே மாதம் பாடலை அவமதிப்பதை தண்டனைக்குரிய குற்றமாக்க வகை செய்யும் மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
தேசிய கௌரவம் மீதான அவமதிப்புகள் தடுப்புச் சட்ட திருத்த மசோதா-2026 எனும் மசோதா, மக்களவையில் கடந்த மாதம் 30-ந்தேதி நிறைவேற்றப்பட்டது. அதற்கு முந்தைய நாள் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
தற்போது ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளதால், தேசிய கீதமான "ஜன கண மன" பாடலுக்கு வழங்கப்படும் கவுரவம், தேசிய பாடலான வந்தே மாதரம் பாடலுக்கு கொடுக்கப்படும்.
அரசு நிகழ்ச்சிகள் உள்ப்ட எந்தவொரு நிகழ்ச்சியிலும் ஜன கண மன பாடல் பாடப்படுவதற்கு முன்னதாக வந்தே மாதரம் பாடல் பாடப்பட வேண்டும்.
வருகிற 15-ந்தேதி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடி ஏற்றி உரையாற்ற இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் முதன்முறையாக முழுமையாக வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டு, அதன்பின் ஜன கண மன பாடல் பாடப்படும்.
தேசிய கௌரவம் மீதான அவமதிப்புகள் தடுப்புச் சட்ட திருத்த மசோதா-2026இன்படி, தேசிய சின்னங்களான தேசியக் கொடி, அரசமைப்புச் சட்டம், தேசிய கீதம் உள்ளிட்டவற்றுடன் தேசியப் பாடலான வந்தே மாதரத்தை அவமதிப்பதையும் தண்டனைக்குரிய குற்றமாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தேசிய கீதத்துக்கு உள்ள அதே சட்டபூர்வ பாதுகாப்பை தேசியப் பாடலுக்கும் வழங்கும் புதிய மசோதாவின்படி, வந்தே மாதரம் பாடல் பாடுவதைத் தடுப்பது, இடையூறு விளைவிப்பது உள்ளிட்ட செயல்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
வந்தே மாதரம் பாடலின் 150-ஆவது ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலின் 6 சரணங்களையும் பாட வேண்டும்.