வேலை வாங்கித் தருவதாக லட்சக்கணக்கில் மோசடி: கன்சல்டன்சி உரிமையாளர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, போலி விசா மற்றும் பணி நியமனக் கடிதங்களை வழங்கி லட்சக்கணக்கில் பண மோசடி செய்த ஸ்ரீநகர் கன்சல்டன்சி உரிமையாளர் மீது ஜம்மு காஷ்மீர் குற்றப்பிரிவின் பொருளாதாரக் குற்றத்தடுப்புப் பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
விசாரணையில் அம்பலமான மோசடி..
ஸ்ரீநகரின் ஆலி காடல் பகுதியைச் சேர்ந்த பயாஸ் அகமத் சர்கார் என்பவர், காராநகர் பகுதியில் 'எம்/எஸ் ஹெச்ஆர் சாய்ஸ் சர்வதேசக் கல்வி ஆலோசனை மையம்' என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார்.
பஹ்ரைன் நாட்டில் நல்ல வேலை வாங்கித் தருவதாகக் கூறி, இவரிடம் பலர் லட்சக்கணக்கில் பணத்தைக் கொடுத்து ஏமாந்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் பேரில், கடந்த 2021-ஆம் ஆண்டு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
அதிநவீன ஏமாற்று வேலை..
போலீசாரின் தீவிர விசாரணையில், பயாஸ் அகமத் சர்கார் வாடிக்கையாளர்களை நம்ப வைப்பதற்காக விண்ணப்பதாரர்களை நம்ப வைக்க ஆன்லைன் மூலமாக நேர்காணல் நடத்தி, வேளைக்கு தகுதி பெற்றுவிட்டது போலக் காட்டி, அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகளையும் செய்ய வைத்துள்ளார்.
இறுதியாக, முற்றிலும் போலியாகத் தயாரிக்கப்பட்ட பணி நியமனக் கடிதங்கள், விசாக்கள் மற்றும் விமானப் விமானப் பயணச் சீட்டுகளை வழங்கி லட்சக்கணக்கில் பணத்தைப் பறித்தது போன்ற பல போலி நாடகங்களை ஆடியது தெரியவந்துள்ளது.
பணத்தைப் பெற்றுக் கொண்ட பிறகு அவர் யாருக்கும் வேலை வாங்கித் தரவில்லை. மேலும், பாதிக்கப்பட்டவர்கள் தங்களது பணத்தைத் திரும்பக் கேட்டபோது, அதைத் தர மறுத்து ஏமாற்றி வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை..
இந்த மோசடிப் புகார்கள் அனைத்தும் விசாரணையில் ஆதாரங்களுடன் உறுதியானதையடுத்து, பயாஸ் அகமத் சர்கார் மீது மோசடி, போலி ஆவணங்களைத் தயாரித்தல் மற்றும் போலி ஆவணங்களை அசல் போலப் பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் ஸ்ரீநகர் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்குக் காவல்துறை எச்சரிக்கை..
இது போன்ற போலி வேலைவாய்ப்பு முகவர்களிடம் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பொருளாதாரக் குற்றத்தடுப்புப் பிரிவு போலீசார் எச்சரித்துள்ளனர். வெளிநாட்டு வேலை மோசடிகள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், உடனடியாகக் காஷ்மீர் குற்றப்பிரிவு போலீசாரிடமோ அல்லது sspeow-kmr@jkpolice.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.