பாக்யராஜ் மறைவு.. மகளின் திருமண நாள் படங்களை வெளியிட்ட குஷ்புவுக்கு எதிர்ப்பு!!

இயக்குநரும், நடிகருமான கே. பாக்யராஜ் இன்று காலை மறைந்த நிலையில், சமூக வலைதங்களில் நடிகர் குஷ்பு தனது மகளின் திருமணத்தில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பிருக்கின்றன.இயக்குநரும், நடிகருமான கே. பாக்யராஜ் இன்று (ஜூன் 27) காலை மாரடப்பால் தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு முதல்வர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின், அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.


முன்னதாக, கடந்த ஜூன் 25ஆம் தேதி கோவாவில் நடைபெற்ற நடிகை குஷ்பு - இயக்குநர் சுந்தர் சி மூத்த மகள் அவந்திகாவின் திருமண விழாவில், பாக்யராஜும் சென்று கலந்து கொண்டுள்ளார். திருமண விழாவில் பங்கேற்ற அனைவருமே பட்டு வேட்டி, பட்டு சட்டையில் பங்கேற்றதைப் போலவே கே. பாக்யராஜும் அழகான பட்டு வேட்டி - சட்டை அணிந்து பங்கேற்று, மேடையேறி மணமக்களை வாழ்த்திய விடியோக்களும் இப்போது வெளியாகின.


திருமணம் நடைபெற்ற அன்றைய இரவே அவர் கோவாவிலிருந்து புறப்பட்டு சென்னை திரும்பிய நிலையில், இன்று காலை நடைப்பயற்சி சென்றிருந்த போது லேசாக நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக குடும்பத்துக்கு தகவல் சொல்ல, அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


இந்த நிலையில், நடிகை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “அமைதியில் இளைப்பாறுங்கள். உங்களுடன் நான் இருந்த தருணங்கள் என்னுடைய நினைவில் எப்போதும் இருக்கும். மிஸ் யூ” என்று பதிவிட்டு இரங்கலைத் தெரிவித்திருந்தார்.


காலையில் பாக்யராஜுக்கு இரங்கல் பதிவு தெரிவித்திருந்த நிலையில், இரண்டு மணிநேரம் கழித்து கோவாவில் மகளின் திருமணத்தில் பங்கேற்ற தனது கணவர் சுந்தர். சியுடன் இருக்கும் படத்தை குஷ்பு பகிர்ந்தார். பாக்யராஜின் இழப்பிற்காக துக்கம் அனுசரிக்கும் இந்த நேரத்தில், இந்தப் பதிவு உண்மையிலேயே தேவையா? என்று சமூக வலைத்தங்களில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன.


மகளின் திருமண நாள் புகைப்படங்களை வெளியிட்டதற்காக எழுந்த எதிர்ப்புகளுக்கு குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார். அவரின் பதிலில், “அப்படியென்றால் ஏன் என்னைப் பின்தொடர்கிறீர்கள்?? விமர்சிப்பதற்காக மட்டுமா?? என் மகளுக்கு 48 மணி நேரத்திற்கு முன்புதான் திருமணம் நடந்தது. பூர்ணிமாவை யாருக்கு நன்றாகத் தெரியும்? உங்களுக்கா அல்லது எனக்கா?? உங்களுக்குச் சிரமமாக இருந்தால், என்னைப் பின்தொடர்வதை நிறுத்துங்கள். மகிழ்ச்சியாக இருக்க எனக்கு எல்லா உரிமையும் உண்டு” எனப் பதிவிட்டுள்ளார்.


பகிரவும் (Share):

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel