யோகி பாபுவின் 300-வது படம்! ‘அர்ஜுனன் பேர் பத்து’ படத்தின் ‘பொறு மனமே பொறு’ பாடல் வெளியானது!

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான யோகி பாபு பல திரைப்படங்களில் பல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்போது அவரது 300 வது படமாக 'அர்ஜுனன் பேர் பத்து' என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த திரைப்படம் அவருக்கு திரையுலகப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தின் மெலோடி பாடலான 'பொறு மனமே பொறு' என்ற லிரிக்கல் வீடியோ இன்று வெளியாகி இணையதளத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

லாகரி மியூசிக் நிறுவனம் வெளியிட்டுள்ள இப்பாடல், அவசர உலகத்தில் மனித மனம் அமைதி மற்றும் பொறுமையைப் போற்றும் வகையில் அமைந்துள்ளது.

இந்த பாடலுக்கு டி. இமான் தனது வழக்கமான முத்திரையுடன், பல வகையான கருவிகளைப் பயன்படுத்தி மன அமைதி உணர்வைத் தரும் வகையில் இசையமைத்துள்ளார்.

பிரபல பாடலாசிரியர் கார்த்திக் நேதா, "உணர்ச்சி வேகத்தாலே என்றும் எதுவும் மாறிடாதே, அமைதி காப்பதாலே ஒன்றும் அறங்கள் மாய்ந்திடாதே" மற்றும் "மாற்றம் ஒன்றுதானே இயற்கை உண்மை இங்கே" என்று தத்துவ வரிகளை எழுதியுள்ளார்.

இப்பாடலை ஹிருதய் தபஸ்வி மற்றும் சௌந்தர்யா பாலா நந்தகுமார் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

இயக்குனர் ஆர். ராஜ்மோகன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். தேவ் சினிமாஸ் நிறுவனம் சார்பாக கிருத்திகா தங்கபாண்டி இப்படத்தை தயாரித்துள்ளார்.

நடிகர் யோகி பாபு தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் 300 திரைப்படங்கள் என்ற பிரம்மாண்ட சாதனையை இத்திரைப்படத்தின் மூலம் எட்டியுள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக அனாமிகா மஹி நடித்துள்ளார்.

இவர்களுடன் காளி வெங்கட், அருள்தாஸ், லெனின் பாரதி, சுப்பிரமணியம் சிவா, 'மைனா' நந்தினி, செண்ட்ராயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களாக பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவையும், மு.காசிவிஸ்வநாதன் படத்தொகுப்பையும் கவனித்துள்ளனர். மனதை வருடும் இந்த மெலடி பாடல் வெளியானதைத் தொடர்ந்து படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது.

பகிரவும் (Share):

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel